Girl in a jacket

மைலாப்பூர்


ஒரு மின்வெட்டுப் போல்தான் அது வந்து போயிற்று. வாங்கியிருந்த பயணச்சீட்டு கையிலிருந்தது. பஸ் இதுவரை வந்திருக்க வேண்டும்.

கண் விழிக்கையில் ஊரைக் காணவில்லை. தூரத்தில் கடல் சிறிதாகத் தெரிந்தது. அதைத் தவிர வேறு எல்லாமே வற்றியிருந்தது. அந்த இடம் எதுவென்று தெரிந்தது. ஆனால் அவன் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தான்.

நடந்து செல்கையில் பல வருடங்களுக்கு முன்னர் அவன் சென்றுலாவிய அந்தப் பூங்காவில் இரண்டு செடிகள் மட்டும் சிறியதாகத் தெரிந்தன. பூங்கா இல்லை. நிறையக் கட்டிடங்கள் முழுதாகவும் பாதியாகவும் முகப்பில் மாசு படிந்த பெயர்ப் பலகைகளுடன் நின்றன. அசைவற்றும் பழுதடைந்தும் கார்கள் - நடுத்தெருவிலே ரிக்ஷாக்கள் - போக்குவரத்து அதிகமான நேரத்தில் அது நடந்திருக்க வேண்டும்.

சைக்கிள் வண்டிகள் எராளமாகக் கிடந்தன. தூசுப் படலம். ஒரு சினிமாத் தியேட்டர் முகப்பில் பாட்டுப் பாடி கையை உயர்த்தி அசைவற்றிருக்கும் நடிகன் படம் பாதியாக நின்றது.

அஞ்சல் பெட்டியின் துவாரத்தில் ஒரு கவர் தெரிந்தது. கீழே அடுத்த நேரம் ஐந்து மணி எனத் தகவல்.

துணிக் கடைகளின் சரக்குகள் காற்றில் பறந்து கீழே தாழ்ந்து வீழ்ந்து கொண்டிருந்தன. அவைகளின் நிறங்களில் வேற்றுமை தெரிந்தது.

தூரத்துக் கோபுரமும் அதைச் சுற்றியுள்ள இடமும் அடையாளம் கூடவே பெற்றுத் திகழ்ந்தன.

அவன் நடக்கையில் அவனது சப்தம் மட்டுமே கேட்டது. சந்தியில் நான்கைந்து போக்குவரத்து வண்டிகள் விர்ரென்று வந்து இடப்பக்கம் ஒடித்துப் பாதிவரை திரும்பி பிறகு அந்த இடத்திலேயே நின்றிருக்க வேண்டும். போக்குவரத்துத் தீவுகள் இடிந்திருந்தன.

தெருவில் சாக்லேட் கவர்கள் காலில் உரசின. நடைபாதைக் கடைச் சாமான்கள் சிதறிக் கிடந்தன. சில ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகைகள் காற்றில் பறந்தன.

காற்று - அது வீசிக் கொண்டிருந்தது - கடற்காற்று - பக்கத்தில் அது வேண்டிய மட்டும் கொட்டிக்கிடக்கிறது.

அவனுக்கு எதுவும் புரிய வேண்டிய அவசியமில்லையென்பதுபோல நடந்தான். பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையென்னும்போது - அது அப்பட்டமாகத் தெரியும்போது - வியப்பு எங்கேயிருந்து வந்து விடும்? ஓட முடியவில்லையென்பதால் நடந்தான். மனிதர்களேயில்லாத வீடுகள் - சீவராசிகளேயில்லாத ஊர் - கோவிலும் குளமென்று சொல்லத்தக்க பள்ளமும் அவனுக்கு வழி காட்டின. கோவில் பக்கம் சில மின்சார விளக்குகள் எரிந்தன. சில கம்பிகள் தொங்கின.

அவன் வள்ளுவர் சிலை பார்க்க ஆசைப்பட்டிருந்தான் - ரொம்பக் காலமாக. கோவில் இருக்குமானால் அந்தச் சிலையும் இருக்குமென நம்பினான். திறந்தபடியிருந்த ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் தொங்கிய குலையிலிருந்து அழுகிய வாடைப் பழங்களைப் பிய்த்தெடுத்துச் சாப்பிட்டான். எந்த நினைவுமில்லாமல் செயல் நடந்து கொண்டிருந்தது.

தரையில் கரப்பான் பூச்சிகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தன. எறும்புகள் எங்குமில்லை.
ஏதோ நினைவில் அவன் காறியுமிழ்ந்தான்
‘‘யாரது?’’

நாற்சந்தியோரமாக அவள் உட்கார்ந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்தாள். ஆடைகள் புதிது. இன்றுதான் கடையிலிருந்து எடுத்து வந்து போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அவளது எதிரில் சொல்லி வைத்தாற்போல் நின்றான். அவள்தான் கேட்டாள்:
‘‘யாரது?’’

‘‘நடுத்தெருவுக்குப் போகணும்.’’

எப்படிப் போக வேண்டுமென்று அவன் கேட்கவில்லை. செருப்பை உறுதி பார்த்துக் கொண்டே அவள் கூறினாள்.

‘‘எல்லாத் தெருவும் ஒண்ணுதான்.’’

சிறிது சிரிப்பு அவள் முகத்தில் தோன்றினாற் போலிருந்தது. களையாக வெள்ளை வெளீர் என்றிருந்தாள். கட்டுமஸ்தான உடம்பு.

‘‘செருப்புக் கடையில்லையா? புதுசா எடுத்திருக்கலாமே.’’

‘‘இல்லை - துணிக் கடையெல்லாம் திறந்திருக்கு. செருப்புக் கடையில்லை - அன்றைக்கு வெள்ளிக்கிழமை. திறக்கல்லே பூட்டியிருக்கு - உடைக்கணும்.’’

‘‘எத்தனை நாள் ஆச்சு?’’

‘‘தெரிஞ்சு இரண்டு நாள். குளக்கரை பஸ்லேதானே நீ வந்தே - பார்த்தேன். நீ மட்டும்தான் உள்ளேயிருந்தே. இரண்டு நாள் அப்படியே இருந்தே.’’

‘‘நாம மட்டும் எப்படி?’’

‘‘அது தெரியலே - நான் தெரியாத்தனமா காப்பி குடிச்சேன். அதிலே ஒரு கரப்பான் பூச்சியிருந்தது.’’

‘‘அவன் காறித் துப்பினான் - நான் தெரியாத்தனமா காப்பி குடிச்சேன். அதிலே ஒரு கரப்பான் பூச்சியிருந்தது.’’

அவன் காறித் துப்பினான்-ஏதோ நினைவு தெரிந்தவனாக.

‘‘அவைகளெல்லாம் எங்கே?’’

‘‘மிச்சம் மீதியா? - தெரியல்லே - எதுவும் தெரியல்லே. மற்றதெல்லாம் இருக்கு. சைக்கிள்-மோட்டார்-பண்டங்கள்-அதிலே பாத்தியா எனக்கு ஆச்சர்யப்படணம்னே தோணலே. உன்பெயர் என்ன?’’

‘‘முத்து-முத்துக்கறுப்பன்.’’

‘‘தெற்கத்திப் பேராயிருக்கு-மதுரையா?’’

‘‘அதுக்கும் தெக்கே-உன்பேர்?’’

‘‘காயத்ரி.’’

‘‘எப்படிச்சாப்டறே?’’

‘‘அது சௌகர்யமாயிருக்கு - சமைக்கவே செய்யலாம். ஹோட்டல் வேண்டிமட்டுமிருக்கு. ரொட்டிக் கடை நிறைய.’’

‘‘அரிசி?’’

‘‘தாராளமா இருக்கு. பாரேன் எத்தனை கடை?’’

‘‘தெக்கே இப்போ பஞ்சம்-அரிசி கொண்டு போகலாம்.’’

காயத்ரி அவனை நிமிர்ந்து நோக்கினாள். ‘‘முத்துக்கறுப்பன்’’ என்று முழு உச்சரிப்போடு கூப்பிட்டாள். வானத்தைப் பார்த்துக் கொண்டாள்.
‘‘யாருக்காக முத்துக்றுப்பன்?’’

‘‘என் பிள்ளைகளுக்கு’’ என்று சொல்ல வாயெடுத்தவன் நிறுத்தினான். அந்தப் பெண் அமைதி பெற்றுத் தனது தையலை முடித்தாள்.

அதிசயங்கள்
விளைவதில்லை
யாரும்
அதிசயங்கள்
படைத்ததில்லை
அதிசயங்கள்
வேண்டுமானால்
சற்றுப்
பாருங்களேன்.

‘‘எங்கே படுத்துக் கொள்றே?’’

‘‘எங்கே யுந்தான் - இப்போ இந்த பாங்க் உள்ளே - இடம் நல்லாவேயிருக்கு.’’

இருவரும் டீக்கடையொன்றில் நுழைந்து பானம் தயாரித்து அருந்தினார்கள். பிஸ்கட் நிறையவிருந்தது.

‘‘நிறைய பல சரக்குக் கடை - நல்ல பருப்பு. எதிர்க் கடையில் மட்டும் நூறு முட்டையிருக்கும்.’’

‘‘நான் சமைப்பேன் காமாட்சி.’’

‘‘காயத்ரி - காமாட்சியில்லே - இரண்டு பேர் இருந்தா பெயர் அவசியம்.’’

‘‘நீ இந்த ஊர்ப் பெண்ணா, படிச்சிருக்கியா-படிச்சிருக்கணும்.’’

வெயிலில் அந்த ஊர் உருகுவதுபோல் இருந்தது. முத்துக்கறுப்பன் அந்த ஹோட்டலுள் நுழைந்து ஸ்டோரில் தானியங்களை அளவாகக் கலந்து ஊறப்போட்டான். இரவிற்குள் அரைத்துவிடலாம். அரவை இயந்திரங்கள் ஏராளமாகக் கிடந்தன.

அவள் கையில் இரண்டு முட்டைகளுடன் வந்து சேர்ந்தாள். வெயில் சிறிதும் தணியவில்லை. முதன்முறையாக அவனது கண்களில் வியப்புத் தோன்றிற்று.

‘‘நீ இதெல்லாம் சாப்பிடமாட்டேன்னு நினைச்சேன்.’’

‘‘ம்.’’

‘‘நான் சாப்பிடறதில்லே.’’

‘‘சரி-பிரிஜ்ஜிலே இதுதான் கடைசி. வேறு கடை தேட வேண்டியதுதான்.இதோ ஜெலுசில் மாத்திரை-நீ சாப்பிடுவியா.’’

முத்துக்கறுப்பன் பேசாதிருந்தான். அவனுக்குப் பசி போய் விட்டாற் போலிருந்தது.

வெளியே வந்து நடைபாதைப் பழைய புத்தகக் கடையருகே உட்கார்ந்தான். பானங்கள் கலக்கப்படும் சப்தம் முடிந்த சிறிது நேரத்தில் காயத்ரி வெளிவந்தாள்.

இவள் பச்சை முட்டையையே சாப்பிட்டிருப்பாள் என்று நினைத்தான் அவன்.

‘‘ஆச்சா’’ என்றான் இகழ்ச்சியோடு.

அவள் தலையசைத்துப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

‘‘வெயில் அதிகம்.’’

‘‘இது மாசம் சித்திரை.’’

‘‘தேதிதான் தெரியாது.’’

‘‘நான் பஸ்லே வந்து சேர்ந்தது இருபதாம் தேதி.’’

‘‘அது சரி- இன்னிக்குத் தேதி தெரியாதில்லே.’’

சிறிது நேரங்கழித்து அவன் சொன்னான்.

‘‘அமவாசை வரும். அப்போ கண்டு பிடிச்சிடலாம்.’’

கையில் அகப்பட்டது பழைய புத்தகம் - தேவாரம் - அவன் அதைப் புரட்டும்போது வாய்விட்டுப் படிக்க வேண்டும் போலிருந்தது. அவளைக் கேட்டான்.

‘‘உனக்குத் தமிழ் படிக்க வருமா?’’

‘‘எழுத்துக் கூட்டிப் படிப்பேன்.’’

‘‘வீட்டிலே என்ன பாஷையிலே பேச்சு.’’

‘‘வீட்டிலே பேச்சே இல்லை - யாருடனும் - பாச்சாகிட்டேதான் பேசுவேன்.’’

‘‘யாரு-உன் தாத்தாவா?’’

‘‘பாச்சா-என் பூனைக்குட்டி.’’

‘‘ஓ-என்கிட்ட பூனை இல்லே. நாய் வளர்த்தேன்.’’

‘‘நாய்தானே - அது அஞ்ஞானமான பிராணி - பூனை மாதிரியில்லே.’’

‘‘தெரியுது.’’

‘‘ஆனா இந்த உரோடு அந்த என் பு+னையும் போச்சு. நான் கண்விழித்தபோது தெருவில் கிடந்தேன் - எத்தனை நாளோ - எனக்குப் புரிந்தபோது - நம்பமாட்டே - நான் சந்தோஷப்பட்டேன். ஆனா என் பு+னை போச்சு - என் புத்தகங்களும் போச்சு.’’
உயரே மிகவும் கூர்மையாகப் பார்த்து, தான் பார்த்தது ஒரு குருவி இல்லை - இலைதான் - என்று கண்டு பிடித்தான் முத்து. அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

‘‘எனக்கு என் கூட்டம் பிடிக்கல்லே-உன் கூட்டமும் ஆகாது - வித்யாசமேயில்லை.’’

தன் கையிலிருந்த புத்தகத்தைத் தூர வீசி எறிந்தாள் அவள்.

அது ஒரு மாலை நேரமாக மாறிற்று. சூரிய ஒளி பழைய மாதிரி வழக்கமான மாலை நேரத்திற்கானதாய்த் தெரியவில்லை. கடற்கரைச் சாலை வழியாக இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.

‘‘ஒரு கார் எடுத்துக் கொண்டு போகலாம்’’ என்றான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு.

‘‘உனக்குக் கார் ஓட்டத் தெரியுமாக்கும்.’’

‘‘சைக்கிளே தகராறு.’’

‘‘எனக்குத் தெரியும். காலையிலே போகணும். சைக்கிள் நல்லது. சாலையிலே நிறைய கார் மறித்துக் கொண்டிருக்கு. பிளாட்பாரத்திலேயே சைக்கிள் விடலாம்.’’

‘‘எங்கே?’’

‘‘கன்னிமரா நூல் நிலையத்திற்கு.’’

‘‘ஏன்?’’

‘‘சிலது படிக்கணும்-புத்தகங்களைத் தேடணும்.’’

‘‘ஓ.’’

‘‘அதெல்லாம் உனக்குப் புரியாது-இது தேவாரமில்லே.’’

‘‘அது உண்மைதான். ஆனா எனக்கு அந்தப் புத்தகம் இப்பவும் நிம்மதியாயிருக்கச் செய்யுது.’’

‘‘இப்பவுமா-ஆகா?’’

கைகளைக் கழுத்தளவு உயர்த்தி இகழ்ச்சியாகக் கூறினாள். அவளது பக்கம் முட்டையோடு வேறு பலவற்றின் வாசனை பரிணமித்ததை அவன் உணர்கிறான்.
கடல் வித்தியாசமில்லாமல் இருந்தது-சப்தம் சீராக. அங்கே சிறிது நேரம் அவர்கள் பேச்சுத் தொடரவில்லை.
மணலில் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்தன. நேரமாவது தெரியாது உட்கார்ந்திருந்தனர். கைமீது ஏறிய ஒரு பூச்சியைத் தட்டி விடாது அவள் பார்த்து கொண்டிருந்தாள். இருட்டியது.

‘‘இங்கே முப்பது லட்சம் இந்தப் பூச்சிகள் இருக்கும். முன்னாலும் இருந்தது.’’

‘‘நீ நாளைக்கு எப்போ நூல் நிலையம் போறே.’’

‘‘விடிந்ததும் - நீயும் வரயா?’’

‘‘இல்லே - நான் கடல் பக்கமாவேயிருக்கேன். இந்த சர்ச் பக்கத்திலே இருக்கட்டுமா. இல்லே உள்ளே வந்து குளக்கரைப் பக்கம் இருக்கட்டுமா?’’

‘‘எதுக்கு?’’

‘‘கன்னிமரா நூல் நிலையத்திற்கு.’’

‘‘ஏன்?’’

‘‘சிலது படிக்கணும் - புத்தகங்களைத் தேடணும்.’’

‘‘ஓ.’’

‘‘அதெல்லாம் உனக்குப் புரியாது - இது தேவாரமில்லே.’’

‘‘அது உண்மைதான். ஆனா எனக்கு அந்தப் புத்தகம் இப்பவும் நிம்மதியாயிருக்கச் செய்யுது.’’

‘‘இப்பவுமா - ஆகா?’’

கைகளைக் கழுத்தளவு உயர்த்தி இகழ்ச்சியாகக் கூறினாள். அவளது பக்கம் முட்டையோடு வேறு பலவற்றின் வாசனை பரிணமித்ததை அவன் உணர்கிறான்.
கடல் வித்தியாசமில்லாமல் இருந்தது - சப்தம் சீராக. அங்கே சிறிது நேரம் அவர்கள் பேச்சுத் தொடரவில்லை.

மணலில் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்தன. நேரமாவது தெரியாது உட்கார்ந்திருந்தனர். கைமீது ஏறிய ஒரு பூச்சியைத் தட்டி விடாது அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். இருட்டியது.

‘‘இங்கே முப்பது லட்சம் இந்தப் பூச்சிகள் இருக்கும். முன்னாலும் இருந்தது.’’

‘‘நீ நாளைக்கு எப்போ நூல் நிலையம் போறே.’’

‘‘விடிந்ததும்-நீயும் வரயா?’’

‘‘இல்லே - நான் கடல் பக்கமாவேயிருக்கேன். இந்த சர்ச் பக்கத்திலே இருக்கட்டுமா. இல்லே உள்ளே வந்து குளக்கரைப் பக்கம் இருக்கட்டுமா?’’

‘‘எதுக்கு?’’

‘‘நீதானே கேட்டே.’’

‘‘நீ வரயான்னு கேட்டேன். நான் திரும்பி இங்கே வரதா சொல்லலை. கன்னிமராப் பக்கம் ரொட்டிக் கடை நிறைய இருக்கும்.’’

‘‘முட்டையும் இருக்கும்.’’

‘‘ஆமாம்.’’

தெரியாத கடற்பரப்பை அவன் ரொம்ப ரேம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, திடீரெனக் கேட்டான்.

‘‘நீ இப்பவே போனாலென்ன?’’

‘‘லைபரிக்கா?’’

‘‘ம்.’’

‘‘போலாம். திறந்துதான் இருக்கும். இரவிலே இனி எனக்கென்ன பயம். ஆனா எங்கே விளக்கிருக்குமோ என்னவோ - படிக்கணுமே - பிரயோசனமில்லாமப் போயிடும்.’’

‘‘நான் அதுக்குச் சொல்லலே. யாராவது ஒருவர் போய் விடுவது நல்லது.’’

காயத்ரி மூச்சு விட்டாள்.

‘‘ஆமாம். அதைத்தான் நானும் நினைச்சேன். நல்லது - கொட்டது - கலாச்சாரம் - பண்பாடு - ஆன்மீகம் எல்லாவற்றையும் பத்தி யோசிக்கத்தானே வேணும். நில நடுக்கோடு எங்கேயிருக்குன்னு கண்டு பிடிக்கணும். அங்கிருந்து கணக்குப் பார்த்துச் சொந்த ஊரைத் தெடிப் பிடிக்கணும். அங்கிருந்து கணக்குப் பார்த்துச் சொந்த ஊரைத் தேடிப் பிடிக்கணும். நானும் நீயும் ஒரு இடத்தில் இருக்க முடியாது.’’

‘‘இந்த இடம் உனக்குப் பிடித்தமானதாகயிருந்தால் சொல்லு - நான் இப்பவே போயிடறேன்.’’

‘‘எனக்கு ஆட்சேபணையே இல்லை. எனக்கு என் கரப்பான் பூச்சிகளே போதும்.’’

‘‘நீ அசிங்கியமானவ.’’

‘‘நீ மட்டமானவன்.’’

அவர்கள் வெவ்வேறு திசைகளில் நடந்து சிறு பூச்சிகள் போல் மறைகின்றனர்.

எந்தச்சப்தமும் இல்லாது அந்த ஊர் மட்டும் நின்று நிலைக்கிறது.

 


சிறுகதைகள்

{load position article1}

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved