முற்றாத இரவொன்றில்

திரு. காமுத்துரையின் நாவல் “முற்றாத இரவொன்றில்.” படிக்கும் போது ஒன்று மட்டும் தோன்றாமலிருக்காது. அதில் விவரிக்கப்படுகிற வட்டார வாழ்க்கை, வழக்கு எல்லாமே கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமிருக்கும். அதுவல்ல விசேடம். நாஞ்சில் வட்டாரம் சார்ந்த எனக்கே அது புதியதாகத் தெரியவில்லை. கதையில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண் – பெண் விவகாரம் – சாதி அல்லது தகுதியில் உயர்வு – தாழ்வு என்பதெல்லாம் ஒருவகையில் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் குணச்சித்திரங்களில் அந்த தாயார் – வசத்தியின் தாயார் – முன்மொழிந்து நடத்துகிற காரியங்கள் – மகளையே பழி வாங்கத் துணிகிற நிலை – நம் உலகிற்குப் புதிது. அப்படி ஒரு தாயார் இருக்க முடியுமா என்பதல்ல விஷயம். இப்படியும் இருக்கமுடியும் வாழ்க்கை அப்படி என்ற எண்ணம் தோன்றவது தான் முக்கியம்.

அது மிகவும் தெளிவான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உலகம் – வாழ்க்கை – மனித மனம் நேர்கொள்ளும் பாவங்கள் – இவை பற்றிய எண்ணங்கள் விரிவடைந்து, இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று எது என்று ஏங்க வைக்கும். அப்படிப்பட்ட நிலையில் அந்த தாயார் கூட மன்னிக்கப்பட வேண்டிய ஒரு சீவன் என்ற எண்ணமும் ஏற்படலாம்.

– மா.அரங்கநாதன்
6.7.12

காமுத்துரை அவர்களின் நாவலைப் படித்தவுடனேயே தோன்றியவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.

Scroll to Top