
சிதம்பர ரகசியத்தன்மை

ஆழ்ந்த வாசிப்பும் ஆர்வமும் பயிற்சியும் கூடியவர் மா. அரங்கநாதன். அதன் விளைவாகத்தான் அடிப்படையில் தான் ஒரு கவிஞராக இல்லாத போதும் கவிதை பற்றி மிக அகல் விரிவாக கருத்துரைக்க முடிந்திருக்கிறது அவரால்.
சில நவீன தமிழ்க் கவிதைகளை இழை பிரித்து அவர் அர்த்தப்படுத்தியுள்ள பாங்கு சம்பந்தப்பட்ட கவிதைகளை எழுதியவருக்கு கிடைத்த உண்மையான கௌரவம்.
ஒரு வித Detached attachment உள்ள மனிதராய் அவர் வாழ்க்கையை அவதானிப்பது போல கதாபாத்திரங்களையும் அவர் உருவாக்குகிறார் என்று கூறலாம்.
சாதாரண மனிதர்களாக வழக்கமாக தினசரி வேலைகளில் ஈடுபட்டு வருபவர்களாக ஆரம்பமாகும் அவர் கதை மாந்தர்கள் கதை முடியும் போது வாசகமனங்களில் ஒரு அமானுஷ்ய அதிர்வை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
வெளித்தோற்றத்துக்கு எளிமையானதாக நேரிடையானதாக காட்சியளிக்கும் அவருடைய எழுத்து உண்மையில் ஒரு சிதம்பர ரகசியத்தன்மை கொண்டது.
– லதா ராமகிருஷ்ணன்.
அனாயசமான எழுத்து

வாழ்வின் புதிர் தன்மையை வார்த்தை ஜாலங்கள் வழி ‘படைத்து’ நிறுவ முற்படும் நவீன எழுத்துக்களுக்கு மத்தியில் எளியநடையில் பல பொருள்படும் அழுத்தமான சொற்களைக் கொண்டு வாழ்வின் நுண் இழைகளைப் பின்னிப் போட்டு அதன் நுணி புலப்படாமல் நம்மை பரிதவிக்க விடும் அனாயசமான எழுத்து புதுமைப் பித்தனுக்கு அடுத்தபடியாக கைவரக்கூடாதா என்று ஏங்கச் செய்யும் அசாத்தியமான எழுத்து மா. அரங்கநாதனுடையது.
இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’
முன்றில்
(சிற்றிதழ்களின் தொகுப்பு)
பேரா.காவ்யா சண்முகசுந்தரம்
வெளியீடு: காவ்யா
விலை: ரூ 550

ஞானக்கூத்து - மா.அரங்கநாதன்
அந்த பழைய புத்தக கடை பெண்கள் பள்ளிக்கும் காய்கறி மார்கெட்டுக்கும் பின்புறம் இருந்தது. காய்கறிகளின் அழுகின வாடை. சுவருக்கு அந்தப்பக்கம் பள்ளிப் பெண்களின் மனன கோஷம். புத்தக கடையை வெளியிருந்து பார்ப்பவர் காயலான் கடை என்று சொல்லத்தகுந்த தோற்றம். அந்த வழியாக நடந்து கடக்கும்போது உள்ளே நுழைந்து பார்க்க தோன்றியது. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பெயர் சொல்லி அவர்கள் எழுதிய புத்தகம் எதாவது இருக்குமா என்று கேட்டேன். அவரோ யார் எழுதினது என்ற விவரமெல்லாம் தெரியாதுங்க. ஆனால் எதோ சிலது இருக்கும் நீங்களே தேடி பாருங்க, கிடைச்சு பிடிச்சிருந்தா எடுத்துகிட்டு போங்க என்றார்.
சுந்தர ராமசாமியின் “மேல்பார்வை” சிறுகதை ஒன்று உருப்படியாக கிடைத்தது.ஓஷோ புத்தகம் ஒன்று (இன்னமும் பிரிக்கவில்லை) இரண்டு மூன்று கவிதை புத்தகங்கள். பிரபலமே இல்லாத சிலரின் கவிதைகள். புகழ் என்ற வட்டம் இருந்திருந்தாலோ, அல்லது பிரபலாமன ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தால் புகழ்பெற்றிருக்கலாம் அவை. எங்கு பார்த்தாலும் மண்மலர், யவனராணிகளும் இருந்தது. சாண்டில்யன் வாங்கிக்குங்க சார் அதான் “பாஸ்ட் மூவிங்” என்றார். அது இல்லன்னா இது எடுங்க என்று ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களை காட்டினார். அது ஒரு மலைபோல் குவிந்திருந்தது. எவரும் படித்தவுடன் இங்கு வந்து போட்டுவிடுவார்களோ என்று கூட சந்தேகம் வந்தது.
தில்லை அம்பலத்தானும் பிஸிக்ஸ்தியரியும் குரளைப்பேய்களும் மற்றும் முத்துக்கருப்பனும்....
தமிழில் வந்துள்ள பெரும்பாலான படைப்புகள் தமிழ் சினிமாக்களைப் போன்றே மொக்கையானவை. அப்படிப்பட்ட சூழலில், சினிமாக்காரனான என்னை போய், “அரங்கநாதன் படைப்புகளைப் பற்றி என்னிடம் சொன்னதை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன்” – என்று நண்பர் ரவிசுப்ரமணியன் சொன்னபோது, எனக்கு கூச்சமே ஏற்பட்டது.
இதே மாதிரியான ஒரு கூச்சத்தை நான் அரங்கநாதனிடமும் கண்டேன்.
அதுதான் அவரை ஒதுங்கியிருக்கும் படி செய்திருக்க வேண்டும். ஒதுக்கியதே இன்னோரு கோணத்தில் அவரை ஆக்கியதும் என்றெனக்கு புரிந்தது. நாணயத்துக்கு இருபக்கங்கள் இயல்புதானே. ஆனாலும் சில நாணயங்கள் மதிப்பிருந்தும் லௌகீக அர்த்தத்தில் செல்லுபடியாவதில்லை. அதற்காக அது காலாவதி ஆனதென்று அர்த்தமில்லை. காலத்தை முந்திக்கொண்டு புழக்கத்துக்கு வந்த நாணயம் அது. காலத்துக்கு முந்தும்போது அருகில் யாருமின்றி காணாமல் போவது சகஜமாக நடக்க்கூடியதுதான்-இல்லையா. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது எழுத்துலகத்திற்கும் பொருந்தும். இந்நாளில், பாவப்பட்ட ஊமைபிள்ளைகள் என்ன செய்ய முடியும். நல்ல படைப்பாளிகளும் இருட்டடிப்பும் ஒட்டிப்பிறந்தரெட்டை போல வாழும் தமிழுலகில் மா.அரங்கநாதன் போதிய கவனம் கொள்ளப்படாததில் எனக்கொன்றும் வியப்பில்லைதான்.
மா. அரங்கநாதன் என்ற பெயரே எனக்கு அறிமுகமானது மிக சமீபத்தில்தான்.