சொல் புதிது - நகுலன்

மொழியும் கவிதையும், ஒத்திசைவு, நடை, மரபு, வெளிப்பாடு போல – இது தெரிந்த விஷயம்தான். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பதும், புதியன புகுதலும் பழையன கழிதலும் – இவை தமிழ் இலக்கணத்தில் கூறப்பட்டவைதான். மேலும் சரியான முறையில் முறையாகப் படித்தவர்களுக்கும் தெரிந்ததுதான். மிகப் பழைய காலத்தில் முதலில் கவிதைகளைப் படித்த பிறகுதான் இலக்கணம் பயில்விக்கப்பட்டது. இதைப் போலவே வெண்பாவுக்குப் புகழேந்தியும், குறள் வெண்பாவிற்கு வள்ளுவரும் விருத்தத்திற்குக் கம்பனும் போற்றப்பட்டிருக்கிறார்கள். வெண்பாவிலிருந்து விருத்தம் வந்ததும் எந்த வெளி-உருவத்திற்குள்ளும், எந்த இச்சா-சுதந்திரமாக இயங்கும் கவிஞனும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டதில்லை. இதை ஞானக்கூத்தனும் தன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். பாரதி வெளி-உருவத்தை த் தன்னதாக்கிக் கொண்டு கடைசிக் கட்டத்தில வசன-கவிதையும் எழுதியிருக்கிறார். இங்கு ஒன்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.
எந்தக் கலைஞனும் வரையறைகளின் அவசியத்தை உணர்ந்தவன். ஆனால் அவன் அதை ஒரு படைப்புபரமான உள்ளத்தினால் படைக்கிறான். இங்கு கவிதை மொழியின் மொழி என்று கூறுகையில் கவிதை எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அது கவிதையின் மொழியாக வேண்டும். இது கவிஞனின் படைப்பாற்றலை அடிப்படையாகக் கொண்டது. இது அறிவின் குறுகிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இவைகளைத் தான் அரங்கநாதன் கூறுகின்றார்.
அடுத்தபடியாகக் கவியைப் பற்றி இந்த நூலில் கூறப்பட்டவை பற்றி ஒரு சில தகவல்கள். கவி என்பவன் சிந்தனையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன் என்று கூறப்படுகிறது. சரி. எந்த வகையில்? இந்த இடத்தில் நண்பர் நாகூர் ரூமி ஒரு இடத்தில் எழுதியது ஞாபகம் வருகிறது. கல்வி பயிலும் முறையில் நாம் ஊட்டி ஊட்டியே வளர்க்கப் பட்டிருக்கின்றோம் என்று எழுதியிருந்தார். இதனாலேயே சுயமாகவே எதையும் உணர்ந்து சொல்லும் ஆற்றல் சோடைபோய் விடுகிறது. அடுத்தபடியாக முன் கூட்டியே திட்டப்படுத்தப் பட்ட அளவுகோள்களுடன், எதிர்பார்ப்புகளுடன் ஒரு கலைப்படைப்பை அணுகும் பொழுது அந்த முயற்சி வியர்த்தமாகி விடுகிறது. மேலும் ஒரு கவியின் முக்கிய இயல்புகளில் பார்வை என்பது. இந்தப் பார்வை என்பதுதான் என்ன? கவிஞன் தன் உள் உணர்வினால், அனுபவத்தை உருவாக்குகையில் அது ஒரு பிரபஞ்சமாகவே விரிகிறது. இதைக் கூறுகையில் இதுவே அவன் முயற்சி அவன் வெற்றி. மேல்நாட்டுக் கவிஞன் ஒருவன் கூறிய மாதிரி இதைத் தவிர வேறு ஒரு நோக்கமும் சமூகத்தைச் சீர்திருத்துவதோ ஒரு கொள்கையைப் பரப்புவதோ அவன் நோக்கமில்லை. ஒரு கவிதைக்கு வேறு வேறு அறிவுத் தளங்களுடன் தொடர்புண்டென்றால் அவைகள் ஒன்றுடனும் அதை ஏகோபிக்க முடியாது.

படைப்பு உருவாகுகையில் – இது கலைஞனின் முடிவு பெறாத தேடலின் விளைவு – அவன் காலத்திலிருந்து கழன்று விடுகிறான். அது மாத்திரமன்று; அவன் படைப்பில் அவன் அருவமாக வியாபித்து விடுகிறான். இலக்கிய மரபு-இங்கு அதன் பரந்த நுணுக்கமான வகையில் – செயல்படுகிறது. இப்படியெல்லாம் எழுத படைப்பாற்றல் உடைய ஒரு கலைஞனால்தான் முடியும்.
மா.அரங்கநாதன் அவர் ‘வீடு பேறு’ கதைத் தொகுதியால் இலக்கிய உலகில் ஒரு நிரந்தர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்ஸனைப் போல க.நா.சுவைப்போல சாரமானத் தன் கண்டுபிடிப்புகளை உதிர்த்துச் செல்கிறார் – இந்த நடையே அவர் எழுத்துகளை மீண்டும் மீண்டும் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது. ‘வீடு பேறு என்ற சிறுகதையே ஒரு நாவலின் எல்லையும் பரிணாம மும் உடையது. அடுத்தபடியாக அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கக் கூடியது ஒரு நாவலை. அதுவும் செயல்படும் – செயல்பட வேண்டும் என்பது என் அவா.