Girl in a jacket

ஞானக்கூத்து

நியூயார்க் - வெஸ்ட் சைட் அவின்யூவிலிருந்து, சிவசங்கரன் என்கிற சிவம் தன் தந்தை முத்துக்கறுப்பனுக்கு எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்.

() () ()

இரவு ஏழரை மணிக்கு மேல் பேசுவதுதான் நல்லது. அம்மாவும் இருக்க வேண்டும்.

() () ()

நடந்துதான் போகிறேன். நன்றாகவே இருக்கிறது. ரயிலில் போனால் ஒரு டாலர் ஆகிவிடுகிறது. நடந்து செல்வதில் கஷ்டமில்லை.

() () ()

இங்கே ஒரு கோவில் இருக்கிறது. ஒரு தடவை போயிருந்தேன்.

() () ()

எனக்கு சால்ட் லேக் சிட்டி என்ற இடத்திற்கு மாற்றம் கிடைக்கக் கூடும்-அதாவது எங்கள் கம்ப்யூட்டர் பிரிவிலுள்ள அத்தனை பேருக்கும்!

() () ()

சமையல் செய்வதில் கஷ்டமில்லை. எல்லாம் கிடைக்கிறது. பிஞ்சுக் கத்தரிக்காயும் வெண்டைக்காயும் வாங்குவது சுலபம்.

() () ()

நிறையப் படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. முன்பு போல ஆர்வமில்லை.

() () ()

திருமந்திரமும் அருட்பாவும் என்னிடம் பத்திரமாக உள்ளன.

() () ()

இங்கே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வேலை பார்க்கும் ஒரு நிருபரோடு பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நல்ல அனுபவம். நிறையப் படித்திருக்கிறாள் - கம்ப்யூட்டர் விஞ்ஞானம் உட்பட – உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறாள். சென்னை கூட வந்திருக்கிறாளாம். நிறைய மொழிகள் தெரிகிறது. ஒரேயடியாகச் சொல்லிவிட்டாள். “இன்னும் நூறாண்டு ஒருவர் உயிரோடிருந்தால் அப்போதும் படித்துக் கொண்டிருக்கக் கூடியவை இரண்டே இரண்டு – ஆலீசின் அற்புத உலகம் - திருக்குறள்.” அவள் பெயர் செல்வி லவூலா.

() () ()

இங்கே உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலமே போதும். அதைக் கொண்டே ஒப்பேற்றிவிடலாம். முதலில் எப்படியிருக்குமோ என்றிருந்தேன். இப்போது பழகிவிட்டது. இங்கேயுள்ளவர்களிடம் கேட்டால் அவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள் எங்களுக்குத் தெரிந்ததும் இவ்வளவுதான்’ என்று.

() () ()

காலையிலே பழச்சாறுதான் - ரொட்டி பழகிவிட்டது. என்னுடன் இருக்கும் நண்பர்கள் வேறுவகையான உணவுகளைச் சாப்பிடுகின்றார்கள்.

() () ()

தொலைபேசிக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டிவிடுவது நல்லது.

2

தலைமைச் செயலக இணைச் செயலாளர் முத்துக்குமாரசாமி பிள்ளை (இ.அ.ப.) என்று அச்சடிக்கப்ட்ட அருமையான தாளில் ‘ஓய்வு’ என்று மாத்திரம் மையால் எழுதப் பெற்று முத்துக்கறுப்பனுக்கு வந்த கடிதம்.

“நம்முடைய சங்கம் மூலமாகத்தான் தங்கள் பையனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தேன்.

எங்கள் பூர்வீகம் தெற்கே – குடும்பம் பரம்பரைச் சைவம்தான். என் சித்தப்பா அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஊரிலிருக்கும் அவர் தங்கள் தந்தையை அறிவார். சித்தப்பா சொல்லி விட்டால் போதும் - நாங்கள் எதுவும் பேசுவதில்லை.

எங்களுக்கு ஒரே பெண். எம்.எஸ்ஸி. தேறியுள்ளாள். ஊர்ப்பக்கம் குடும்பத்து வீடும் நான்கு கோட்டை விதைப்பாடு வயலும் உண்டு. இங்கே அசோக் நகரில் சொந்த வீடு. எல்லாம் பெண்ணிற்குத்தான். அவளது விஞ்ஞான படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக தற்போது கல்லூரியொன்றில் வேலை பார்க்கிறாள்.

நாற்பது ஆண்டுகள் சென்னையிலிருந்தும் நமக்குள்ளே அறிமுகம் இல்லாமல் போனது அதிசயமே. தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் அறியாவிடினும் நம் முன்னோர்கள் ஆசியாலும் நம் சமூகச் சங்க உதவியாலும் இந்த சம்பந்தம் நடைபெறவுள்ளது. சிவனருள்போலும்.

மேலும் தங்கள் கடிதங்கண்டு.

ஏழு மணிக்குத்தான் பள்ளிக்கூடம் முடிந்து வந்தாள் சரசுவதியம்மாள். தாழ்வாரத்தில் சாய்வு நாள்காலியில் உட்கார்ந்திருந்த முத்துக் கறுப்பன், “வர நேரமாயிடுமோன்னு பாத்தேன் - போன தடவையே பயலுக்கு ரொம்பவும் வருத்தம்” என்றார்.

சரசுவதி முகங்கழுவிக் கொண்டாள். காப்பி போட்டுக் கொண்டிருக்கும் போது, தொலைபேசி மணியடித்தது. “நீங்களே எடுங்க நான் பொறகு பேசுறேன்” என்றாள்.

முதலில் யாரோ பேசியபிறகு சிவத்தின் குரல் கேட்டது.

“அப்பாதானே - இன்னைக்கும்அம்மா இல்லையா?”

“இருக்கா – உனக்கு வேற இடத்துக்கு மாத்தம் இருக்கும்னு எழுதியிருந்தியே – அது என்னவாச்சு?”

“அது அடுத்த சனிக்கிழமைதான் தெரியும். அநேகமா போக வேண்டியிருக்கும். இங்கிருக்கிற நாலு பேரும் போகணும்.”

“அது ரொம்ப தூரமாச்சே.”

“ஆமா – எல்லாம் கம்பெனி பொறுப்புதான். இடங்கூட அவங்க தான் தருவா. போனா ஒரு ஐநூறு டாலர் அதிகம் கிடைக்கும்.”

“உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லையே?”

“ஒண்ணுமில்லை – அம்மாகிட்டே குடு அப்பா.”

சரசுவதி குழலை வாங்கிக் கொண்டாள்.

“மக்கா – உடம்பு எப்படியிருக்கு – எண்ணைதேச்சுக் குளிக்கியா.”

“எல்லாம் நடக்குதம்மா. அங்க ஒண்ணும் விசேடமில்லையே. வீடு ரிப்பேர் பண்ணணும்னா பண்ணிடலாம். பணம் அனுப்பித் தரேன். அப்பாக்கு உடம்பு எப்படியிருக்கு? ‘போரிங்’லே தண்ணியெல்லாம் அப்பா அடிக்காண்டாம்.”

“மாத்தம் எங்கியோ இருக்கும்னு அப்பா சொன்னாளே.”

“இருக்கும் - நான் எழுதுகேன்.”

“அப்பாட்ட குடுக்கட்டுமா?”

“நேரமாகிப் போச்சே – வைச்சுருகென் - எழுதறேன்.”

வைத்துவிட்டு சரசுவதியம்மாள், “எவ்வளவு அருமையா சத்தம் கேக்குது பாத்தேளா – பக்கத்திலேயிருந்து பேசுறது மாதிரி இருக்குது” என்று வியந்தாள்.

4

உயர்திரு முத்துக்குமாரசாமி பிள்ளையவர்களுக்கு முத்துக்கறுப்பன் எழுதிக் கொண்டது.

தங்கள் அறிமுகம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. இதைப் பற்றி பையனுக்கும் விவரம் தெரிவித்திருக்கிறேன் - தங்களுக்குத் தெரியும், பிள்ளைகள் விருப்பப்படிதான் எல்லாம் வேண்டுமென்று.

என் தந்தையாரையும் மற்ற முன்னோரையும், தங்கள் சித்தப்பா மூலமாகத் தெரியும் என்று எழுதியிருந்தீர்கள். இருந்தாலும் நானும் சில விவரங்கள் தருவது நல்லது.

என் தந்தை சிவசங்கரன் அவர்கள் ஆறுபடை வீடுகளைப் பார்த்து வருகிறேன் என்று புறப்பட்டுப் போய் திரும்பவேயில்லை - இன்று வரை. என் தாயார் கடைசிக் காலம் வரை தாலியணிந்திருந்தே உயிர் விட்டாள். அவள் சாவு இயற்கையானதில்லை என்று ஊரில் ஒரு பேச்சு உண்டு.

நான் பள்ளியிறுதியில் தேறாதபடியால் இங்குவந்து வேலை தேடிக் கொண்டேன். என் மூத்த சகோதரர் – அவருக்கு வயது அறுபத்தைந்து - இப்போதும் தமது மனைவியார் வீட்டில்தான் வாசம். அவர்தம் மகன் ஆபத்தில்லாத மனநோய் கொண்டவன் என்று சொல்கிறார்கள். என் தம்பி – வயது நாற்பத்தைந்து - இப்போதுதான் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி எஸ்.எஸ்.எல்.சி. தேறியுள்ளான். இன்னும் ஓர் ஐந்து ஆண்டுகளில் கீழ் நிலை எழுத்தராக பணியில் பதவியுயர்வு கிடைக்கும். தம்பியின் பிள்ளைகள் இப்போது தங்கள் அம்மாவுடன் வசிக்கின்றனர்.

என்பெரியப்பா – விடுதலைப் போராட்ட சமயம், தம்முடைய மகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க வேதாரண்யம் சென்று, அங்கே ஒரு பலசரக்கு கடையில் உப்பு வாங்கி வந்தபோது, போலீஸ் தடியடிப்பட்டு, ஜெயிலுக்குப் போய் பின்னர் தியாகிகள் பென்ஷன் பெற்றுக் காலமானார். பெரியம்மா வீட்டில்தான் நானிருந்தேன். பால் மாடுகள் நாலைந்து அவர்களுக்கு. நான்தான் அவற்றைக் கவனித்து வந்தேன். வேனற்கால விடுமுறையில் என் கவனக் குறைவு – மேய்ச்சலில் ஒரு மாடு காணாமல் போயிற்று. நான் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு வந்து விட்டேன்.

தாய்மாமன் பற்றியும் நான் சொல்ல வேண்டும். ஊரில் தான் இன்னமுமிருக்கிறார். அங்கே தென்னை மரங்களிலிருந்து காய்களைத் திருடி அவர் விற்றது எனக்கு ஏழு வயதிலிருந்தே தெரியும். இப்போது அம்மன் கோயில் சொத்து அவர் கையில். எனக்கு அவரது முகம் மறந்துவிட்டது.

சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, என் கல்யாணம் முடிந்தது. இங்குள்ள சாதி சங்கத்தில் போய் அழைப்பு வைத்தேன். அந்தச் செயலாளர் சாந்தமாக “நீ அழைப்புத் தரவேண்டியது அரசுக்குத்தான் - சங்கத்திற்கல்ல” என்றார்.

அவர் சொன்னது உண்மைதான். நான் மணஞ்செய்து கொண்டது, ஓர் ஆதி திராவிடப் பெண். எனினும் அரசாங்கத்திற்கு அழைப்புத் தரவில்லை.

இப்போது சங்கத்தில் எனக்கு யாரையும் தெரியாது. இருந்த போதிலும் அவர்கள் பலவிதத்திலும் உதவியாயிருப்பது நல்ல காரியம்.

5

“அவருக்குத்தானே உங்க பதிலை அனுப்பணும், ‘காப்பி’யை எதுக்கு பையனுக்கு.”

“அவனைப் பத்தினதுதானே இந்தப் பதில் - படிக்கணும் அவனும்.”

“பொங்கல் சமயத்திலே வந்தா ஏதாவது முடிவாப் பார்த்துச் செய்தாகணும்னு எழுதிடுங்க.”

“அதையும் எழுதியிருக்கேன்.”

“எங்கப் பள்ளிக்கூடத்திலே சொன்னா ஒருத்தி – யாரையாவது கூட்டிக்கிட்டு வந்து நின்னா என்ன செய்வேன்னு?”

“என்ன செய்வே?”

“இப்பக்கூட எழுதியிருக்கான் பாத்தேளா – ஏதோ பெண் நிருபர்னு அந்த மாதிரி பழக்கம் வந்து ஒரு வெள்ளைக்காரியைக் கூட்டிக்கிட்டு வந்துட்டா?”

“அப்படிச்சொல்ல முடியாது.”

“ஏன் முடியாது?”

“வெள்ளைக்காரியாத்தான் இருக்கணுமா, - அமெரிக்காவிலே கருப்பர்களும் உண்டு.”

முத்துக்கறுப்பன் சாய்வு நாற்காலியில் தன்னைச் சாய்த்துக் கொண்டார். நல்ல காற்று வீசியது. இந்தப் பட்டணத்தில் முதன் முறையாக நல்ல காற்றை அனுபவிப்பவர் போல் மூச்சிழுத்துக் கொண்டு கண்களை மூடினார்.

சிறுகதைகள்

{load position article1}

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved