என்ன பெயர் வைக்கலாம் - ஒரு குறிப்பு
“ வடசேரி சந்தையில் தரகராக செழித்து வளர்ந்த ஒருவர் திடீரென மூச்சை நிறுத்திவிட அந்திம கடன்களை முடித்த அவரது பையன் தொலைவிலுணர்தல் முதற்கொண்டு எல்லா வகையான சோதிட சாத்திரங்களை கற்றுணர்ந்த பெரியவரிடம் வந்து தன் தகப்பனார் மரணச் செய்தியைக் கூறி குடும்பச் சொத்து விசயமாக தகராறு இருக்கிறது என்றும் தன்னுடைய பங்கு குத்து மதிப்பாக எவ்வளவு கிடைக்கும் என்று கேட்க அந்த ஞானி சுவரிலே பெருக்கல் குறி ஒன்று போட்டு கண்ணை மூடி தியானித்து பின்னர் திறந்து ஒரு தடவை அவனைப் பார்த்து மறுபடியும் சிறுது நேரம் கண்ணை மூடி பிறகு சொன்னார்:
“தம்பி – உன் தகப்பனார் மாமல்லபுரத்தில் ரொட்டிக் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்”
பையன் சிறிது ஏளனத்துடன் “போன வாரந்தான் அவர் செத்துப் போயிட்டாரே ஐயா” என்று சொல்லவும், அவர் “தெரியாது தம்பி – உன் தகப்பனார் மாமல்லபுரத்தில் ரொட்டிக் கடை வைத்திருக்கிறார் – இப்போதும் இருக்கிறார் – அது தெரிகிறது” என்றார்.”
தீராநதி இதழில் மேற்படி தலைப்பில் வந்த கதையைப் பற்றி நண்பர் பட்சிராஜன் கூறுகையில் இம்மாதிரி டெலிபதி பற்றிய விசயங்கள் எல்லா ஆசிய நாடுகளிலும் குறிப்பாக ஜப்பான் – சீனா போன்றவற்றிலும் சொல்லப்படுகிறது என்று தெரிவித்தார்.
மறைமலை அடிகளாரின் “தொலைவிலுணர்தல்” புத்தகத்தைப் பற்றி சென்னை நகராண்மைக் கழக அலுவலகத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அடிகளாரின் புதல்வர் மறை. திருநாவுக்கரசு அவர்கள் இம்மாதிரி விசயம் பற்றி அடிகளாரும் தெரிவித்திருக்கிறார் என்றார். மறை. திருநாவுக்கரசு அவர்கள் நகராண்மைக் கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.
அந்தக் காலத்தில் – சென்ற நூற்றாண்டின் மத்தியில் - இம்மாதிரி டெலிபதி விசயம் எல்லாருக்கும் புதிதுதான். இங்கேயும் கதைகள் இருந்திருக்கின்றன.