நட்பாக மாறிய ஒரு தொழில்முறை உறவு
மருத்துவர்கள் என்றால் பற்றற்ற, பாசமற்ற இயந்திரங்களாக – ஆனால், பிணியாளர்களிடமும் மட்டும் பரிவு கொண்ட (!?) மனிதர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான எதிர்பார்ப்பு, எழுதாத விதிமுறை.
ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட குணநலன் இருக்கும் என்கிறார்கள். எனது குணநலன் இதுவா எனப் புரியவில்லை – நான் எல்லோரிடமும் நெருங்கிப் பழகுவேன். அது ஒரு நிறைவைத் தரும் விஷயம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் 50வயது மதிக்கத்தக்க நெடிய உருவம் கொண்ட ஒருவர் காய்ச்சல் என்றுதான் என்னிடம் வந்தார். வந்த சில நிமிடங்களிலேயே இவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு மாமனிதர் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அலுவலகத்திலிருந்த மருத்துவமனையில் முதன்முதலில் அவரைச் சந்தித்தேன்.
என் மேசை மீதிருந்த ஓர் ஆங்கில நாவலைச் சுட்டிக்காட்டி, “புத்தகம் படிப்பதுண்டா?” என்றார்.
நிறைய படிப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டேன்”. இர்விங் வாலெஸ் – ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா முழுக்க முழுக்க ஆராய்ச்சி பண்ணித்தான் எழுதுவார். நிறைய தெரிஞ்சுக்கலாம் அவர் புக்குலருந்து….
மெல்லச் சிரித்த அவர் “ஒரு நோயைப் பற்றி டாக்டருக்கு நிறைய தெரியும். அதை அப்படியே எழுதினா அது படைப்பாயிடுமா? படைப்பிலக்கியம்னா வேற… தமிழ் இலக்கியம் படிக்கிறதுண்டா?
“இல்லே… பள்ளியில படிச்சதுதான்….”
“படிச்சுடுங்க….” என்று போனவருக்கு காய்ச்சல் ஓரிரு தினங்களில் குணமானது.
ஆனால் எங்கள் நட்பு தொடர்ந்தது. என்னைக் காட்டிலும் 20 வயது மூத்தவர். அவருடைய மகனும் எனக்கு அறிமுகமானார். இரு தலைமுறையுமே மிக நெருங்கிய நண்பர்களாகவே பழக, இலக்கிய உலகை எனக்குக் காட்டியது அவர்தான்.
அதுவரை நகைச்சுவைத் துணுக்குகளையே சிறுகதைகளாக, அதுவும் ஒரு பக்கக் கதைகளாக எழுதிவந்த நான், பிறகு மாற்றி எழுதும் நிலைக்கு வந்தேன். ஒவ்வொரு முறையும் நான் எழுதிய கதை அவரிடம் சிறு அடித்தல் திருத்தல் பெற்று, புதுவடிவம் மட்டுமல்ல… முழுமையே பெறும்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நல்லா தெரியுது. அதையே ஏன் பூடகமா சொல்லக்கூடாது” எனத் துவங்கி நடந்த ஒரு கொடூரமான நிகழ்வை நான் விவரித்தபோது, “வீடியோ காமெரா வந்த பிறகு இது தேவையில்லே. உங்களுக்கு ஏற்பட்ட மனநிலை பாதிப்பை வாசகனும் உணரணும்… ஆனா இப்படி இல்லே” என்று திருத்தியிருக்கிறார்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நன்கு அறிந்த அவரைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த முக்கியமான முடிவும் நாங்கள் எடுப்பதில்லை. எந்தவொரு விஷயமானாலும் மிக ஆழ்ந்த சிந்தனையோடு தெளிவாக, ஆனால் மிகவும் சுருக்கமாகச் சொல்லும் அவர் – எழுத்துலக ஜாம்பவான், திரு மா. அரங்கநாதன் அவர்களே.
புதுவையில் வசிக்கும் அவரோடு வாரம் மூன்று நான்கு முறையாவது தொலைபேசியில் உரையாடுவதோடு, தலைமையாசிரியரிடம் ஒரு மாணவன் கொண்டுள்ள மரியாதை கலந்த அன்பு வைத்திருக்கும் எனது நட்பு தொடர்கிறது.
Laid – back personality என்ற ஆங்கில உருவகத்திற்கு இவரைக் காட்டிலும் பொருத்தமான நபர் இருக்க முடியாது. தானே விளம்பரத்தைத் தேடி அலையும் மக்கள் மத்தியில், தனக்கு என ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டத்தில் கூட மேடையில் அமரத் தயங்கியவர் அவர்.
மருத்துவக் கடடுரைகள் கொண்ட அறிவியல் நூல் எழுதுகிறேன் என்றதும், “அது சரி… ஆனா அதோட நிக்காதீங்க….” என்று அவ்வப்போது இன்னமும் அறிவுரை வழங்கும் அவர் எனது நண்பர் என்பதைவிட, என் வழிகாட்டி என்பதே பொருத்தமானது.
டாக்டர் ப. செல்வராசன்
01.03.2012
நட்பாக மாறிய ஒரு தொழில்முறை உறவு
மருத்துவர்கள் என்றால் பற்றற்ற, பாசமற்ற இயந்திரங்களாக – ஆனால், பிணியாளர்களிடமும் மட்டும் பரிவு கொண்ட (!?) மனிதர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான எதிர்பார்ப்பு, எழுதாத விதிமுறை.
ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட குணநலன் இருக்கும் என்கிறார்கள். எனது குணநலன் இதுவா எனப் புரியவில்லை – நான் எல்லோரிடமும் நெருங்கிப் பழகுவேன். அது ஒரு நிறைவைத் தரும் விஷயம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் 50வயது மதிக்கத்தக்க நெடிய உருவம் கொண்ட ஒருவர் காய்ச்சல் என்றுதான் என்னிடம் வந்தார். வந்த சில நிமிடங்களிலேயே இவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு மாமனிதர் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அலுவலகத்திலிருந்த மருத்துவமனையில் முதன்முதலில் அவரைச் சந்தித்தேன்.
என் மேசை மீதிருந்த ஓர் ஆங்கில நாவலைச் சுட்டிக்காட்டி, “புத்தகம் படிப்பதுண்டா?” என்றார்.
நிறைய படிப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டேன்”. இர்விங் வாலெஸ் – ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா முழுக்க முழுக்க ஆராய்ச்சி பண்ணித்தான் எழுதுவார். நிறைய தெரிஞ்சுக்கலாம் அவர் புக்குலருந்து….
மெல்லச் சிரித்த அவர் “ஒரு நோயைப் பற்றி டாக்டருக்கு நிறைய தெரியும். அதை அப்படியே எழுதினா அது படைப்பாயிடுமா? படைப்பிலக்கியம்னா வேற… தமிழ் இலக்கியம் படிக்கிறதுண்டா?
“இல்லே… பள்ளியில படிச்சதுதான்….”
“படிச்சுடுங்க….” என்று போனவருக்கு காய்ச்சல் ஓரிரு தினங்களில் குணமானது.
ஆனால் எங்கள் நட்பு தொடர்ந்தது. என்னைக் காட்டிலும் 20 வயது மூத்தவர். அவருடைய மகனும் எனக்கு அறிமுகமானார். இரு தலைமுறையுமே மிக நெருங்கிய நண்பர்களாகவே பழக, இலக்கிய உலகை எனக்குக் காட்டியது அவர்தான்.
அதுவரை நகைச்சுவைத் துணுக்குகளையே சிறுகதைகளாக, அதுவும் ஒரு பக்கக் கதைகளாக எழுதிவந்த நான், பிறகு மாற்றி எழுதும் நிலைக்கு வந்தேன். ஒவ்வொரு முறையும் நான் எழுதிய கதை அவரிடம் சிறு அடித்தல் திருத்தல் பெற்று, புதுவடிவம் மட்டுமல்ல… முழுமையே பெறும்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நல்லா தெரியுது. அதையே ஏன் பூடகமா சொல்லக்கூடாது” எனத் துவங்கி நடந்த ஒரு கொடூரமான நிகழ்வை நான் விவரித்தபோது, “வீடியோ காமெரா வந்த பிறகு இது தேவையில்லே. உங்களுக்கு ஏற்பட்ட மனநிலை பாதிப்பை வாசகனும் உணரணும்… ஆனா இப்படி இல்லே” என்று திருத்தியிருக்கிறார்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நன்கு அறிந்த அவரைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த முக்கியமான முடிவும் நாங்கள் எடுப்பதில்லை. எந்தவொரு விஷயமானாலும் மிக ஆழ்ந்த சிந்தனையோடு தெளிவாக, ஆனால் மிகவும் சுருக்கமாகச் சொல்லும் அவர் – எழுத்துலக ஜாம்பவான், திரு மா. அரங்கநாதன் அவர்களே.
புதுவையில் வசிக்கும் அவரோடு வாரம் மூன்று நான்கு முறையாவது தொலைபேசியில் உரையாடுவதோடு, தலைமையாசிரியரிடம் ஒரு மாணவன் கொண்டுள்ள மரியாதை கலந்த அன்பு வைத்திருக்கும் எனது நட்பு தொடர்கிறது.
Laid – back personality என்ற ஆங்கில உருவகத்திற்கு இவரைக் காட்டிலும் பொருத்தமான நபர் இருக்க முடியாது. தானே விளம்பரத்தைத் தேடி அலையும் மக்கள் மத்தியில், தனக்கு என ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டத்தில் கூட மேடையில் அமரத் தயங்கியவர் அவர்.
மருத்துவக் கடடுரைகள் கொண்ட அறிவியல் நூல் எழுதுகிறேன் என்றதும், “அது சரி… ஆனா அதோட நிக்காதீங்க….” என்று அவ்வப்போது இன்னமும் அறிவுரை வழங்கும் அவர் எனது நண்பர் என்பதைவிட, என் வழிகாட்டி என்பதே பொருத்தமானது.
டாக்டர் ப. செல்வராசன்
01.03.2012