மொழிபெயர்ப்பில் புதுமைப்பித்தன்
திசையெட்டும் என்ற இதழோடு, புதுமைப்பித்தனின் மூன்று கதைகள், மூன்று கவிதைகள், ஒரு கட்டுரை ஆகியவற்றின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு இணைப்பாக கிடைத்தது.
மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்த சிலவற்றை புதுச்சேரி வந்தபின் பெற நேர்ந்தது. மேற்படி புதுமைப்பித்தன் படைப்பின் மொழிபெயர்ப்பு அவற்றில் ஒன்று.
அத்தனை படைப்புகளும் அருமமையான மொழிபெயர்ப்பில் தரப்பட்டுள்ளன. கதைகள், கவிதைகள் ஆகியவற்றைவிட கவிதையைப் பற்றிய சிறுகட்டுரை அற்புதமாக இருந்தது. தமிழில் முதன்முறையாக, பையனாக இருந்தபோது என்னை மொழி மூலம் எங்கே அந்தப் படைப்பாளி அழைத்துச் சென்றாரோ, அதே இடத்திற்கு இப்போதும் நான் இந்த மொழிபெயர்ப்பு மூலம் வந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். சொல்லாமலே இத்தனை தெளிவாக ஒன்றை சொல்லிவிட முடியம் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.
அதன் சாரமும் ஏளனமும் மொழிபெயர்ப்பிலும் - குறிப்பாக கடைசி வாக்கியம் (…Oh! Poetry! Let us talk about it next time) - வந்து அதை நிறைவேற்றுகிறது.
புதுச்சேரி முனைவர் பி. ராஜாதான் அந்த மொழிபெயர்ப்பாளர்.
மா. அரங்கநாதன்
01.03.2012